» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!

வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே தற்போது நிலவும் பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கடந்த 2000 ஆண்டிலிருந்தே தமிழ்நாடு மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் ஆண்டுதோறும் வீறுநடை போட்டு முன்னேடி வருகின்றது. இன்னும் அடுத்த பத்து ஆண்டுகளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறி செல்லும் என்பதில் ஐயமில்லை. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கு இயக்கப்பட்ட புதிய ரயில்கள் என்று மிகவும் குறைவு ஆகும். 

இதில் மொத்த மக்கள் தொகையில் 90 சதமானம் மக்கள் பயணம் செய்யும் சாதாரண எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் தினசரி ரயில்கள் என்று பார்த்தால் வெறும் நான்கு ரயில்கள் மட்டுமே உள்ளது. இதனால் தற்போது இயங்கும் ரயில்களில் பயணிகள் நெருக்கடி என்பது தினசரி அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த 1990களிலிருந்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டிலும் கணிசமான அளவில் புதிய ரயில்கள் அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை பல்வேறு துறைகள் பொருளாதார வளர்ச்சி காரணமாக தமிழக பயணிகள் பல்வேறு அலுவல் பணிகள், தனிப்பட்ட பயணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக அதிக அளவில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் நபர்கள் முதல் தேர்வு ரயில் பயணங்கள் உள்ளன. இதனால் ரயில்களில் 2000-வது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போன்ற இல்லாமல் அதிக பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னையிலிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் உள்ள முன்பதிவு நெருக்கடியை வைத்து அதை தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு ஏற்ப புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் ரயில்வேதுறை இது போன்ற கோரிக்கைகளை கண்டு கொள்வது கிடையாது. தமிழ்நாட்டு எம்.பிக்கள் கோரிக்கை வைத்தால் மதிப்பதே கிடையாது மட்டுமல்லாமல் அவர்களின் கோரிக்கை வைத்தால் வர இருக்கின்ற ரயில் கூட வராது. ஏனென்றால் தமிழ்நாடு எம்.பிக்கள் கோரிக்கை வைத்து ரயில் வந்துவிட்டால் தமிழ்நாடு எம்.பிகளுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் அல்லவா எனவே புதிய ரயில் அல்லது ரயில் நிறுத்தம் வரும். ஆனால் ஆளும் கட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை வைத்தால் ரயில் நிறுத்தம் ரயில்வே அமைச்சர் உடனடியாக கொடுக்கப்படுகிறது

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள், பணம் படைத்தவர்கள் என பொருளாதார அடிப்படையில் பல தரப்பு வகையான மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பயன்படும் படியாக ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் அதிக அளவில் தினசரி எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்க வேண்டும்.

ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் பாஸ்ட் ரயில் அறிவித்து இயக்கப்பட்டால் அந்த ரயிலில் ஏழை பயணிகள் முன்பதிவு அற்ற பெட்டிகளில் பயணம் செய்வார்கள். நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பயணிகள் சீலிப்பர் பெட்டிகளில் பயணம் செய்வார்கள், மேல் நடுத்தர வர்க்க பயணிகள் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் மேல்தட்டு மக்கள் 2-ம் ஏசி , முதல் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வார்கள். 

கடந்த 10 ஆண்டுகளில் புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம் என்பது மிகவும் குறைவு ஆகும். இதில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்பது மொத்தம் நான்கு தான் உள்ளது. 

1. கொல்லம் - சென்னை தினசரி இரவு நேர ரயில் (மீட்டர் கேஜ் இயக்கப்பட்டது)

2. திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி தினசரி இரவு நேர ரயில் (நான்கு சிலிப்பர் பெட்டிகளுடன் இயக்கம்)

3. நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா தினசரி (மாண்புமிகு சுரெஷ்பிரபு ரயில்வே அமைச்சராக இந்த காலத்தில் ஏழை பயணிகள் பயன்படும் நோக்கில் முழுவதும் முன்பதிவு அற்ற ரயில் இயக்கப்பட்டது. இந்த காரணத்தால் அவர் ரயில்வேஅமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

4. ராமேஸ்வரம் -தாம்பரம் தினசரி ரயில் 

இது தவிர இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் வாராந்திர ரயில், வாரம் இரண்டு, மூன்று, என்று தான் உள்ளது. அல்லது ஹம்சாபர், தேஜஸ், வந்தே பாரத் என்று பணம் படைத்தவர்கள் மட்டும் செல்லும் ரயில்கள் தான் உள்ளது. (இது போன்ற ரயில்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லும் பயணிகள் வாக்குசாவடிக்கு க்கு வாக்களிக்க செல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் தினசரி ரயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 1993ம் வருடம் முதலும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக 2005-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த இரண்டு ரயில்களில் சென்னைக்கு பயணம் செய்யும் பயணிகள் தோராய எண்ணிக்கை

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டிகளில் உள்ள இருக்கைகள் விவரம்

இரண்டாம் வகுப்பு படுக்கை – 560 இருக்கைகள்
ஏசி எகானமி பெட்டி – 56 இருக்கைகள்
மூன்றாம் வகுப்பு ஏசி – 320 இருக்கைகள்
இரண்டாம் வகுப்பு ஏசி – 104 இருக்கைகள்
மொத்தம் - 1040 இருக்கைகள் 

இதைப்போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டிகளில் உள்ள இருக்கைகள் விபரம்

இரண்டாம் வகுப்பு படுக்கை – 960 இருக்கைகள்
மூன்றாம் வகுப்பு ஏசி – 249 இருக்கைகள்
இரண்டாம் வகுப்பு ஏசி – 104 இருக்கைகள்
மொத்தம் - 1313 இருக்கைகள் 

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்ட நாள் முதல் தினசரி 1040 நபர்கள் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 1313 பயணிகள் என்று தினசரி இரண்டு ரயில்களில் சேர்த்து 2353 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அல்லது தேவை வெகு அதிகமாக உள்ளது. ஆகவே மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த 2353 இருக்கைகளுக்கு அடி போடுகிறார்கள். இதில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நபர்களுக்கு இருக்கைகள் கிடைக்கின்றன. இது மட்டுமல்லாமல் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட பயணிகள் இந்த இரண்டு ரயில்களில் பயணம் செய்கிறார்கள்.

பயணிகளின் தேவையையோட்டி கடந்த 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முந்தைய தினம் நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மூன்று முறை ரயிலை அறிவித்து இயக்கியது. இந்த ரயில் இயங்கும் மூன்று நாட்களும் 814 இருக்கைகள் கிடைத்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தது என்று குறிப்பிடலாம். 

இரண்டாம் வகுப்பு படுக்கை – 640 இருக்கைகள்

மூன்றாம் வகுப்பு ஏசி – 144 இருக்கைகள்

இரண்டாம் வகுப்பு ஏசி – 30 இருக்கைகள்

மொத்தம் 814 இருக்கைகள்

நிரந்தர தீர்வாக ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதிகரித்தால் மட்டுமே பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். புதிய வழித்தடங்களில் ரயில்கள் அறிவித்து இயக்கவில்லை என்றால் இவ்வாறு தேவை அதிகரித்து கொண்டே இருக்கும். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் உள்ள இருக்கைக்கு பெரும் நெருக்கடி நிலவுகின்றது. 

ஆனால் கட்டணம் எவ்வளவு அதிகரித்தாலும் பயணிகள் எந்த மறுப்பும் இன்றி வாங்குவார்கள் என்ற நிலைக்கு கடந்த 10 வருடங்களில் கொண்டு வந்துவிட்டார்கள். இன்னும் 10 வருடங்கள் இது தொடர்ந்தால் இது இன்னமும் வரும் காலங்களில் அதிபடியாக உயரும். அடுத்துதான் ரயில்வேதுறையின் உண்மையான முகம் வெளியில் வரும். தற்போது நடக்கும் அனைத்தும் நீண்ட நெடுங்கால திட்டமாக அனைத்தும் தனியாரிடம் கொடுத்து விட வேண்டும் என்று மிகவும் பக்காவாக பிளான் பண்ணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல் தினசரி ரயில்: கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், சேலம் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி புதிய சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்க வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை ஆகும். 

இவ்வாறு தமிழகத்தின் கடைசி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினசரி ரயில் இயக்கும் போது சென்னை சென்ட்ரலிருந்து வட இந்திய நகரங்களுக்கு செல்லும் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இணைப்பு ரயிலாக இந்த ரயில் இருப்பதால் மிகவும் வசதியாக இருக்கும். சென்னை எழும்பூரிலிருந்து ஆட்டோ பிடித்து சென்ட்ரலுக்கு செல்ல தேவை இருக்காது.

நாகர்கோவில் - தாம்பரம் தினசரி ரயில்: தற்போது நாகர்கோவிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் வாரம் மூன்று நாள் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும். இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கும் போது மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்ல கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் 2005-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போது நாகர்கோவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 23:15 மணிக்கு சென்னை இயக்கப்படும் சிறப்பு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயிலை இரண்டு மார்க்கங்களிலும் இரவு 10:30 மணிக்கு புறப்படும் இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது அனைத்து பணிகளும் முடிந்து இரவு உணவை முடித்துவிட்டு இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இவ்வாறு வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே தற்போது நிலவும் பயணிகள் நெருக்கடி ஒரு அளவுக்கு குறையும். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் மட்டும் இட நெருக்கடி ஏற்படும். இந்த நேரங்களில் சிறப்பு ரயில்கள் அறிவித்து இயக்குவதன் மூலம் இது போன்ற பண்டிகை கால நெருக்கடியைத் தவிர்க்க அல்லது குறைக்க முடியும்.என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory