» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு

செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 10-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நெல்லை சந்திப்பு வழியாக இயங்கும் அனைத்து ரயில்களின் போக்குவரத்திலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை - திருச்செந்தூர் இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்கள் பகுதி ரத்து மற்றும் வழித்தட மாற்றம்:

வண்டி எண் 56004 / 56003 (திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர்):

ஜூன் 12 மற்றும் ஜூன் 14 முதல் 16 வரையிலான 4 நாட்களுக்குத் திருச்செந்தூரில் இருந்து காலை 10:00 மணிக்குக் கிளம்பும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56004) மற்றும் நெல்லையிலிருந்து மாலை 4:30 மணிக்குக் கிளம்பும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56003) ஆகியவை நெல்லை சந்திப்பு - செய்துங்கநல்லூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த 4 நாட்களும் இந்த ரயில்கள் செய்துங்கநல்லூர் - திருச்செந்தூர் இடையே மட்டுமே இயக்கப்படும்.

வண்டி எண் 56752 / 56753 (திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர்):

ஜூன் 14 முதல் 24 வரை திருச்செந்தூரில் இருந்து காலை 7:05 மணிக்குத் புறப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56752) செய்துங்கநல்லூர் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து காலை 9:55 மணிக்குக் கிளம்ப வேண்டிய பயணிகள் ரயில் (வண்டி எண் 56753), நெல்லைக்குப் பதிலாகச் செய்துங்கநல்லூரில் இருந்து காலை 10:14 மணிக்குத் திருச்செந்தூருக்குப் புறப்பட்டுச் செல்லும்.

ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் விபரம்:

வண்டி எண் 56004 / 56003: ஜூன் 17 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை திருச்செந்தூர் - நெல்லை இடையே முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56755 / 56758: வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11:30 மணிக்குத் திருச்செந்தூர் செல்லும் ரயில் (வண்டி எண் 56755) மற்றும் திருச்செந்தூரிலிருந்து மாலை 6:15 மணிக்குக் கிளம்பும் ரயில் (வண்டி எண் 56758) ஆகிய இரு ரயில்களும் ஜூன் 22 முதல் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56751 / 56754: ஜூன் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நெல்லையிலிருந்து காலை 7:10 மணிக்குத் திருச்செந்தூர் செல்லும் ரயில் (வண்டி எண் 56751) மற்றும் திருச்செந்தூரிலிருந்து மாலை 4:25 மணிக்கு நெல்லை வரும் ரயில் (வண்டி எண் 56754) உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் அனைத்தும் அன்று ஒருநாள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றங்கள்:

திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16732) ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் பின்வருமாறு பகுதி ரத்து செய்யப்படுகிறது:

ஜூன் 24, 25, 26, 28, 29 (5 நாட்கள்): திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து மதியம் 4:15 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கிப் பாலக்காடு நோக்கிச் செல்லும்.

ஜூன் 27, 30 (2 நாட்கள்): மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மாலை 4:15 மணிக்கு மதுரையிலிருந்து நேரடியாகப் பாலக்காட்டிற்குப் புறப்பட்டுச் செல்லும் எனத் தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory