» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானாவில் ரூ.6,800 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 5, மார்ச் 2024 11:43:17 AM (IST)
தெலங்கானாவில் சுமார் ரூ. 6,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
ஐதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தை இன்று தொடங்கி வைத்துள்ள பிரதமர் மோடி, சங்காரெட்டி பகுதியில் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்ந்த பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இந்திய விமான நிலைய ஆணையத்தால் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் ரூ. 350 கோடி செலவில் இந்த அதிநவீன சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸெகந்திராபாத்தில் அமைந்துள்ள உஜ்ஜைனி மகாகாளி கோயிலில் பிரதமர் மோடி இன்று(மார்ச் 5) வாழிபாடு நடத்தினார்.இதனைத்தொடர்ந்து, இன்று ஒடிஸா செல்லும் பிரதமர் மோடி, ஜஜ்பூரில் உள்ள சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
முன்னதாக நேற்று (மார்ச் 4) தெலங்கானாவின் அதிலாபாத்தில் ரூ. 56,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்ததோடு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.