» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெறுவது ஏன்?: ராகுல் காந்தி
வியாழன் 7, மார்ச் 2024 11:20:32 AM (IST)
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெறுவது ஏன்? என்று புதுச்சேரி சிறுமி கொலைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடர்ந்து, சிறுமியைக் கொன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் பல தரப்புகளிலிருந்தும் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: 9 வயது புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெறுவது ஏன்? 2022ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.3 லட்சம் குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 31,000 குற்றங்கள் பாலியல் வன்கொடுமையாக நிகழ்ந்துள்ளன.
உத்தரகண்ட்டில் சாலையில் அமர்ந்திருக்கும் அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, ஜார்கண்டில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஸ்பெயின் சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் சரி, இது போன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் இரக்கமற்ற சமூகத்தின் பிரதிபலிப்பாகும். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையுமே வளர்ந்த தேசத்தின் அடையாளம். என்று தெரிவித்துள்ளார்.
அதுMar 9, 2024 - 05:30:44 PM | Posted IP 172.7*****