» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு

வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது ஜெயராம் சார்பில் வக்கீல் ஆதித்யசவுத்திரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் (சிறுவன் கடத்தல்) கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள மனுதாரருக்கு தொடர்பு இல்லை. முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜெயராமுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி கைது செய்யப்பட்டு, 17-ந் தேதி மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டார். இத்துடன் மனுதாரர் கூடுதல் டி.ஜி.பி. பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

உடனே தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மிஷா ரோத்தகி, 'மனுதாரரை கைது செய்யவில்லை. காவல்துறை புலன் விசாரணையில் பங்கேற்றார். விசாரணையில் பங்கேற்க செய்வதில் அக்கறை செலுத்தினோம்' என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 'மனுதாரர் ஜெயராம் 28 ஆண்டுகளாக போலீஸ் உயர் அதிகாரியாக இருப்பவர். கைது செய்யவில்லை என்றால் ஏன் அவரை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்தது?. அதற்கான தேவை என்ன?. இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. நம்பிக்கையை குலைக்கிறது' என்றும் கருத்து தெரிவித்ததோடு, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நீதிபதி மன்மோகன், '18 ஆண்டுகளாக நீதிபதியாக உள்ளேன். இவ்வாறு கைது செய்ய உத்தரவிடும் அதிகாரம் இருப்பதை அறிந்திருக்கவில்லை' என குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'ஜெயராமின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற முடியுமா?, இல்லையா?' என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory