» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!

செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)



மத்திய பிரதேசத்தில் வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரத்தில் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பால கட்டுமான ஒப்பந்த நிறுவனமும் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் ஆயிஷ்பாஹ் பகுதியில் புதிதாக ஒரு ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம், புதிய போபால் நகரின் மகமாய் கா பாஹ் மற்றும் புஷ்பா நகர் பகுதிகளை இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த பால கட்டுமானம் இப்போது விமர்சனம் மற்றும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

பொதுவாக பாலங்கள் சீரான ஏற்ற இறக்கத்துடன், வாகனங்கள் திரும்ப உகந்த வளைவுடன் அமைக்கப்படும். ஆனால் ஆயிஷ்பாஹ் பாலம், வளைவு இல்லாமல் 90 டிகிரி திருப்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

இதையடுத்து மாநில முதல்-அமைச்சர் மோகன் யாதவ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் 2 மூத்த பொறியாளர்கள் உள்பட 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மற்றொரு பொறியாளர் ஓய்வு பெற்ற முதுநிலை மேற்பார்வை பொறியாளர் ஆவார். அவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. மேலும் பால கட்டுமான ஒப்பந்த நிறுவனமும் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள். அருகில் மெட்ரோ ரெயில் நிலையம் இருப்பதாலும், திட்டப்பணிக்கு ஒதுக்கப்பட்ட இடப்பற்றாக்குறையாலும் பாலம் இப்படி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் சிறிது நிலம் ஒதுக்கித் தரப்பட்டால் பாலத்தை தேவையான வளைவுடன் மாற்ற முடியும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory