» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்: திமுக புறக்கணிப்பு!

புதன் 22, ஜூலை 2026 12:16:45 PM (IST)

IndiallianceBlack.jpg

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அப் போராட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' உட்படப் பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது :

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரால் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கருப்பு உடையில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்:

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வருகை தந்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும், கூட்டணிக் கட்சி எம்பிக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திமுக புறக்கணிப்பு:

அதேவேளையில், 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் இப் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் கருப்பு உடை அணியாமல் வழக்கமான உடையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory