» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேரலை நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுட்டுக் கொலை : பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கரம்!

திங்கள் 6, நவம்பர் 2023 12:56:50 PM (IST)



பிலிப்பைன்ஸ் நாட்டில் வானொலி நிலைய நேரலை நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஜுவான் ஜுமலன் (57). பிலிப்பைன்ஸின் மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் கலம்பா நகரில் உள்ள வீட்டில் அவர் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் புகுந்துள்ளார். அப்போது ஜுவான், லைவ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கொண்டு இருந்துள்ளார். 

மக்கள் அதனை கவனித்து கொண்டிருந்தபோது, மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஜுவான் படுகாயமடைந்து உயிரிழந்து விட்டார். ஜானி வாக்கர் என்ற பெயரில் அறியப்படும் ஜுவான், அவருடைய இல்லத்திலேயே வானொலி நிலையம் அமைத்து செயல்படுத்தி வந்து இருக்கிறார்.

இதுபற்றி தடயவியல் துறையினர், கலம்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு புலனாய்வு அதிரடி படை ஒன்றும் அமைக்கப்படும். விரைவாக வழக்கு விசாரிக்கப்படும் என போலீஸ் மண்டல அலுவலகத்தின் மண்டல இயக்குநர் ரிகார்டோ லயுக் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கஸ் ஜூனியர் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த லைவ் நிகழ்ச்சியின்போது பதிவான வீடியோ, பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும், நிகழ்ச்சியை கவனித்தவர்களில் சிலர் அதனை பதிவு செய்துள்ளனர்.

அதில், ஜுமலன் அணிந்திருந்த தங்க நெக்லசை மர்ம நபர் பறிக்க முற்படுகிறார். அதன்பின் சம்பவ பகுதியில் இருந்து தப்பி ஓடுகிறார். பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதிபர் மார்கஸ் 2022-ம் ஆண்டு ஜூனில் பதவியேற்றதில் இருந்து கொல்லப்பட்ட 4-வது பத்திரிகையாளராக ஜுமலன் உள்ளார் என மணிலா டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory