» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாலஸ்தீனத்துக்கு மேலும் 3 நாடுகள் அங்கீகாரம்

திங்கள் 22, செப்டம்பர் 2025 8:27:58 AM (IST)

ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இந்த வாரம் நடக்கும் நிலையில், சுதந்திர பாலஸ்தீன நாட்டை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 2 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 65 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 90 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து விட்டனர். அங்கு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சண்டை நீடிப்பதால், கவலை அடைந்துள்ள உலக நாடுகள், சுதந்திர பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவிக்கத் தொடங்கின. முதலில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதுவரை ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் உள்பட 145-க்கு மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.

ஆனால் அப்படி அறிவிப்பது, ஹமாஸ் இயக்கத்தினரை வலுப்படுத்துவதாக அமைந்து விடும் என்று இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இந்த வாரம் நடக்கிறது. அதில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நேற்று பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன. கனடாவும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளது. அதன் பிரதமர் மார்க் கர்னி, இதை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அருகருகே வாழும் இரு நாடுகள் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மார்க் கர்னி ஏற்கனவே தனது கருத்தை ஜூலை மாதமும் தெரிவித்து இருந்தார். அவரது நிலைப்பாட்டால், கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது கடினமாகி விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதையும் மீறி, மார்க் கர்னி தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory