» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி கேட்க வேண்டும்! - ஈரானின் அதிரடி கோரிக்கை!

சனி 7, மார்ச் 2026 11:47:53 AM (IST)



இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏன் என்பது குறித்து, இந்திய அரசு அமெரிக்காவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்ற அவர், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் ஒரு அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற பொய்யான வாதத்தை முன்வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ‘பெரிய இஸ்ரேல்’ (Greater Israel) என்ற போலி பிம்பத்தை உருவாக்குவதற்காகவே இந்தப் போர் நடத்தப்படுகிறது. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது; இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை ஒன்றே சரியான வழி."

"ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ஒருபோதும் முடக்கவில்லை. இந்தியாவுக்கு வரும் வணிகக் கப்பல்களை நாங்கள் மறிப்பதும் இல்லை. ஒரு பொறுப்புள்ள நாடாக, ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் நங்கூரமாகவே ஈரான் செயல்பட்டு வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்களை அமெரிக்கா இலக்கு வைப்பது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும். உண்மையில் இப்பிராந்தியத்திற்கு அமெரிக்காதான் அச்சுறுத்தலாக உள்ளது."

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், மனிதாபிமான அடிப்படையில் ஈரான் போர்க்கப்பல் ஒன்றிற்கு இந்தியா புகலிடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவப் பின்னணி: இலங்கை அருகே ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ (IRIS Dena) போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தகர்க்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் லாவன்’ (IRIS Lavan) கொச்சி துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் பங்கேற்க வந்த இந்தக் கப்பலில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 28 அன்று ஈரான் விடுத்த அவசரக் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசு மார்ச் 4 அன்று அக்கப்பல் கொச்சியில் நிலைநிறுத்தப்பட அனுமதி அளித்தது. தற்போது 'ஐஆர்ஐஎஸ் லாவன்' கப்பலில் இருந்த 183 கடற்படை வீரர்கள் கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory