» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: புதிய ஹமாஸ் தளபதி முகமது ஒடே கொல்லப்பட்டார்!

வியாழன் 28, மே 2026 8:34:43 PM (IST)



காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவ தளபதியான முகமது ஒடே கொல்லப்பட்டார்.

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த வரலாற்று பேரழிவிற்கு பழிவாங்கவே இஸ்ரேல் காசா மீது 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போரை தீவிரமாக தொடுத்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய ராணுவ தளபதியான இசுதீன் அல்-ஹடாத் கடந்த 15ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஹமாஸின் மிக முக்கிய உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான முகமது ஒடே புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.

அடுக்குமாடி குடியிருப்பில் தாக்குதல்:
இந்நிலையில் காசா நகரின் ரிமால் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தை குறிவைத்து இஸ்ரேல் துல்லியமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் புதிய ராணுவ தளபதியான முகமது ஒடே கொல்லப்பட்டார். இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 4ஆவது முக்கிய தளபதி இவர் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் முகமது ஒடேவுடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து பெண்கள் உள்பட 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், புனித பக்ரீத் பண்டிகைக்கு முன்தினம் இத்தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளைத் தாண்டி நீடிக்கும் இப்போரினால் காசாவின் 90 சதவீத மக்கள் (20 லட்சம் பேர்) வீடுகளை இழந்து, கழிவுநீர் தேங்கிய தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பின்னும் 880 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இப்போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 72 ஆயிரத்து 700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory