» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!
ஞாயிறு 17, டிசம்பர் 2023 10:52:57 AM (IST)
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி வல்லநாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றிகொண்டு விருதுநகரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு நெல்லை- தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை விருதுநகர் மாவட்டம் குண்டல குத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த கணபதி மகன் பொன் இருளப்பன் (34) ஓட்டினார்.
வல்லநாடு நான்கு வழிச்சாலை மெயின் பஜாரில் லாரி வந்தபோது பக்கவாட்டு சுவரில் லாரி பயங்கரமாக மோதியயது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே பஜாரில் நின்றவர்கள் காயமடைந்த டிரைவர் பொன் இருளப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வல்லநாடு மெயின் பஜாரில் இருந்த தடுப்பு வேலியை ஓரமாக வைத்து போக்குவரத்தை சீர்செய்தனர்.
விபத்து நடந்த பகுதி எப்போதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடமாக இருப்பதால், அன்று சாலையில் இருந்து சிறிது தூரம் இந்த விபத்து நடந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடைலே லாரி கவிழ்ந்து விழும் காட்சிகள் அருகில் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.