» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏற்றிய மக்கள் : நெல்லை அருகே பரபரப்பு!
வெள்ளி 26, ஜனவரி 2024 11:58:16 AM (IST)
மானூர் அருகே சோலார் நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் குடியரசு தினமான இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட தென்கலம், தென்கலம் புதூர் நல்லம்மாள்புரம், உள்ளிட்ட 10 கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய மூலிகை செடிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அங்குள்ள விவசாய நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும், சிலரின் நிலங்களை குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை எடுத்துக் கொண்டதால் கால்நடைகள் மேய்ச்சல் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக சோலார் பேனல் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்டோர் தென்கலம் கிராம மையப்பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தென்கலம் அலவந்தான் குளம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளிலும் கிராமத்தின் முக்கிய பகுதிகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. குடியரசு தினமான இன்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.