» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள்: நீதிபதி வேண்டுகோள்!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 4:03:00 PM (IST)
வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாடுங்கள் என்று திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சமீனா வேண்டுகோள் விடுத்தார்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று (12.04.2024) தமிழ்நாட்டில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பொதுமக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைவாக சமரசமாக முடிப்பது பற்றிய சமரச தின விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சமீனா, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சமரசம் என்பது வழக்கு தரப்பினர்கள் தங்களது முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு காணக்கூடிய எளிய வழி என்றும், சமரசத்தின் போது வழக்கு தரப்பினர்கள் தங்கள் உள் மனம் திறந்து பேசி தங்கள் வழக்கினை விரைவாக நீதிமன்றங்கள் முடித்து வைக்க வழிவகை செய்கிறது என்றும், எனவே பொதுமக்கள் தங்கள் வழக்குகளை சமரச மையத்தில் உள்ள பயிற்சிப் பெற்ற சமரசகர்கள் முன்னிலையில் பேசி நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளை விரைவாக முடிக்க சமரச மையத்தை நாடுங்கள் என்றும் திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) ளு.சமீனா கேட்டுக்கொண்டார்கள்.
இந்நிகழ்வில், உதவி காவல் ஆணையாளர் கீதா, 1-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், தலைமை குற்றவியல் நீதிபதி இராபின்சன் ஜார்ஜ், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, சமரச மைய ஒருங்கிணைப்பாளர்/ கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், நீதித்துறை நடுவர்கள் திரிவேனி, ஆறுமுகம், பாக்கியராஜ், விஜய்ராஜ்குமார், கவிபிரியா, அருண்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் இராஜேஸ்வரன், காவல்துறை அதிகாரிகள், அரசு சட்டக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், பயிற்சி பெற்ற சமரச மைய வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள், அரசு சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.