» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செங்கோட்டையில் முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா பறவைக்காவடி வீதிஉலா
வியாழன் 2, மே 2024 3:30:34 PM (IST)
செங்கோட்டையில் முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழாவில் பறவைக்காவடி வீதிஉலா நடைபெற்றது.
செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு முப்படாதி அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொடைவிழா கடந்த 23ஆம் தேதியில் கோவில் வளாகத்தின் முன்பு திருக்கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. விழாவில் நாள்தோறும் அம்மன் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடத்தப்பட்டது.
தொடா்ந்து நாள்தோறும் கோவில் வளாகம் முன்பு வைத்து கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவு, கும்மிப்பாட்டு, திருவாசகம் முற்றோதுதல், ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக கொடை விழா அன்று காலை குற்றாலத்திலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. பால்குட ஊர்வலம் வீதி உலா பின்னா் மாலையில் கோவில் முன்பு உள்ள வளாகத்தில் பொங்கலிடுதல் நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனா். அதனைதொடா்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியாக விரமிருந்த பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவில் வந்தடைந்தனா். அதில் சுப்பிரமணியம் தெரு பகுதியை சேர்ந்த ராம்தாஸ் என்ற பக்தர் நேர்த்திக்கடனுக்காக 3வது ஆண்டாக பறவைக்காவடி எடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது.
பின்னா் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்புடாதி அம்மன் எழுந்தருளி வாணவேடிக்கையுடன், சென்ட மேளம், மற்றும் மேளதாளங்கள் இசையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. விழாவில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை யாதவர் சமுதாய நிர்வாகிகள், விழாக் கமிட்டியினா், இளைஞரணி நிர்வாகிகள் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனா்.