» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் தீபக் ராஜா உடல் இறுதி ஊர்வலம் : 2000 போலீசார் குவிப்பு

திங்கள் 27, மே 2024 4:30:37 PM (IST)

நெல்லையில் கடந்த வாரம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜாவின் உடலை ஏழு நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதை அடுத்து 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கார்கள் புடை சூழ தீபக் ராஜாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா(30). இவர் கடந்த திங்கட்கிழமை தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . கொலை வழக்குக்கு மூளையாக செயல்பட்டது பிரபல ரவுடியான லெஃப்ட் முருகன் மற்றும் நவீன் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுவரை இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அவரது உடல் உறவினர்களால் பெற்றுக் கொள்ளப்படாமலேயே 7 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து தீபக் ராஜாவின் உடலை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதற்கு அடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தீபக் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்ந்து நெல்லையிலிருந்து வளையங்குளத்திற்கு அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல உறவினர்கள் திட்டமிட்டனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் நான்கு மணி நேரமாக கடந்த அவர்கள் அதற்கு பிறகு அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக நெல்லையில் எதுவும் பிரச்சினை ஏற்படலாம் என்பதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சுமார் 2000 போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபக் ராஜாவின் ஊர்வலத்தின் போது மட்டும் சுமார் 500 போலீசார் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory