» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில்ஆவணங்கள் இருந்தும் நில அபகரிப்பு முயற்சி? நீதி கோரும் முதியவர் குடும்பத்தினர்!

வியாழன் 30, ஏப்ரல் 2026 10:30:15 AM (IST)



தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, ஆளும் கட்சியினர் துணையுடன் மாநகராட்சி நிர்வாகமும் தனிநபர்களும் அபகரிக்க முயல்வதாகப் பாதிக்கப்பட்ட முதியவர் குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

தூத்துக்குடி சின்னமணி நகர் மேற்குப் பகுதியில் வேல் என்பவருக்குச் சொந்தமான 5 சென்ட் இடமும், அதன் பின்புறம் அவரது தாயார் மறைந்த லட்சுமி அம்மாள் பெயரில் 18 சென்ட் இடமும் உள்ளது. வேலுக்குச் சொந்தமான 5 சென்ட் இடத்தில் அசோக் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் வாடகைக்குக் கடை நடத்தி வந்துள்ளனர்.

தற்போது அவர்கள் அந்த இடத்தை ஆவணங்கள் இன்றி அபகரிக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வேல் நீதிமன்றத்தை நாடி, காவல்துறையினர் உதவியுடன் இடத்தை மீட்க உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளார். இருப்பினும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேல் தனது இடத்தில் இருந்த கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற முயன்றார். இதற்கு எதிராக ஆனந்தராஜ் மற்றும் தங்கராஜ் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வேல் மற்றும் அவரது மகன் முருக சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், லட்சுமி அம்மாள் பெயரில் உள்ள 18 சென்ட் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த மாநகராட்சி அதிகாரிகள், அது மாநகராட்சிக்குச் சொந்தமானது எனக் கூறி வேலி அமைத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், 83 வயதான வேல் மற்றும் நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் அவரது 81 வயது மனைவி மாங்கனி அம்மாள் ஆகியோர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாநகராட்சி அமைத்த 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரும்பு வேலியைச் சேதப்படுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வேலின் குடும்பத்தினர் மாநகராட்சி உதவி ஆணையர் காந்திமதியைச் சந்தித்து ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். அப்போது அவர், "இது மாநகராட்சி இடம் கிடையாது, 4 அடி பாதை மட்டுமே கேட்டோம்" எனக் கூறும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முறையான ஆவணங்கள் இருந்தும், ஆளுங்கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தித் தனிநபர்களும் அதிகாரிகளும் நிலத்தை அபகரிக்க முயல்வதாகவும், முதியவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு மிரட்டுவதாகவும் வேலின் பேத்தி குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

உண்மApr 30, 2026 - 11:42:57 AM | Posted IP 104.2*****

இது தான் திராவிட மாடல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory