» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!

வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)



திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (25.06.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, மாவட்ட வன அலுவலர் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் 48.98 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 28.89 விழுக்காடு அதிகமாகும். மேலும், நடப்பு ஜூன் மாதத்தில் 24-ஆம் தேதி வரை 68.31 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, மே மாதத்தில் 3904.415 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 187.77 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களைச் சரிபார்த்து 'வேளாண் அடுக்ககம்' வலைதளத்தில் பதிவேற்றும் திட்டத்தின் கீழ் இதுவரை 46,797 விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பதிவு செய்யாத 7,729 விவசாயிகள் உடனடியாகப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தில் இ-கேவவ்பி (e-KYC) நிலுவையில் உள்ள 1,351 பயனாளிகளுக்கும், வங்கிக்கணக்குடன் எண் இணைப்பு செய்யாத 936 பயனாளிகளுக்கும் சிறப்பு முகாம்கள் வரும் ஜூன் 30 வரை நடத்தப்படவுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி குப்பக்குறிச்சி, நாரணம்மாள்புரம், அழகியபாண்டியபுரம், முன்னீர்பள்ளம், பாப்பாக்குடி உட்பட 13 கிராமங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் 28 கிராமங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ஜூன் 23 வரை 73 விவசாயிகளுக்கு ரூ.1.010 கோடி பயிர்க்கடனும், கால்நடைத்துறை மூலம் 286 விவசாயிகளுக்கு ரூ.2.670 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு அல்லது இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது. இதற்குத் தகுதியான விவசாயிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூட்டத்தின் நிறைவாக, உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்குப் பலலாயிர மதிப்புள்ள உரம் மற்றும் உற்பத்தி இடுபொருட்களை ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory