» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாதிச் சான்றிதழ் அரசாணை ரத்துக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

வியாழன் 9, ஜூலை 2026 12:19:45 PM (IST)

மதம் மாறியவருக்குப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசி-முஸ்லிம்) எனச் சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் 2015-இல் முஸ்லிம் மதத்துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அதன் பின்னர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் ‘முஸ்லிம் லெப்பை’ எனச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, 75 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார் என்றும், அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்க முடியாது என்றும் குறிப்பிட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவு அமலில் இருக்கும்போது அரசாணையால் அதை மாற்றியமைக்க முடியாது எனக் கூறி, தமிழ்நாடு அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனக் குறிப்பிட்டு அதை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் பி. கருணாகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும், மதம் மாறியவருக்குப் பிசி-முஸ்லிம் எனச் சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்புக் கருத்தைக் கேட்கக் கோரி, சயீது இப்ராஹிம் சார்பில் வழக்கறிஞர் பி.வி. யோகேஸ்வரன், எச். முகமது இஸ்மாயில் சார்பில் வழக்கறிஞர் பக்தி வரதன் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory