» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை: நாடகமாடிய தம்பதி கைது!

சனி 16, மார்ச் 2024 5:43:59 PM (IST)

நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர்  கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர். 

நாகர்கோவில் அருகேயுள்ள கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் சமீர் (34), மீன்பிடி தொழிலாளி.இவரது மனைவி ஜெனிபா ஆல்பர்ட் (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெனிபாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிக் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவன் சமீர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் சமயத்தில் ஜெனிபாவும் ஆசிக்கும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். கள்ளக்காதல் விவகாரம் சமீருக்கு தெரிய வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெனிபா மங்குழி பகுதியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். ஜெனிபாவுடன் ஒரு குழந்தையும் சமீருடன் ஒரு குழந்தையும் வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று வேலை முடிந்து சமீர் மனைவி ஜெனிபாவை பார்க்க அவருக்கு தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆசிக் ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சமீர் அவரை அந்த பகுதியில் கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிக் மயங்கி விழுந்தார். இதையடுத்து சமீரும் அவரது மனைவி ஜெனிபாவும் மயங்கி விழுந்த ஆசிக்கை மோட்டார் சைக்கிள் மூலமாக தூக்கி சென்று கேரள எல்லை பகுதியான அம்பிளி கோணம் பகுதியில் வீசி சென்றனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிக்கை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெழியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சமீர், ஜெனிபா இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிக்கை அடித்து கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டனர். 

இது குறித்து சமீர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி யிருப்பதாவது: எனக்கும் ஜெனிபாவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது ஆசிக்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து எனக்கு தெரிய வந்தது. இதனால் எனது மனைவியை நான் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து ஆசிக்கை சந்தித்து வந்தார். இந்நிலையில் எனது மனைவி ஜெனிபா என்னுடன் கோபித்துக் கொண்டு மாங்கொளியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஒரு குழந்தை என்னுடனும் மற்றொரு குழந்தை எனது மனைவியுடனும் இருந்தது. மனைவி ஜெனிபா உடன் இருந்த எனது குழந்தையை பார்க்க செல்ல நான் முடிவு செய்தேன். இதையடுத்து எனது மாமியார் வீட்டிற்கு சென்றேன். அப்போது ஆசிக் எனது மாமியார் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து இருந்தார். மனைவியிடம் கேட்டபோது அவர் சில நாட்களாக இங்கே தங்கி இருந்தது தெரியவந்தது. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆசிக்கை சரமாரியாக தாக்கினேன். அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து எனது மனைவியும் அதிர்ச்சி அடைந்தார். இருவரும் மாட்டிக் கொள்வோம் எனவே அவரை சாலையில் வீசிவிட்டு விபத்து நடந்ததாக நாடகம் ஆடி விளையாடலாம் என்று எண்ணினோம். ஆசிக்கை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சாலை ஓரத்தில் வீச முடிவு செய்தோம். இதையடுத்து நான் மோட்டார் சைக்கிளை ஓட்டினேன்.

எனது பின்னால் ஆசிக்கை அமரவைத்து எனது மனைவி அவரை பிடித்துக் கொண்டார். ஆள் நடமாட்டம் இல்லாத அம்புளிக்கோணம் பகுதியில் வீசிவிட்டு வந்து விட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory