» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி-நாகர்கோவில் இடையே 130 கிமீ வேகத்தில் அதிவிரைவு ரயில் இயக்கி சோதனை!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:17:00 AM (IST)
கன்னியாகுமரி - நாகர்கோவில் இடையே புதிய இரட்டைவழி பாதையில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மதுரை முதல் நாகர்கோவில் வரை இரட்டை ரயில்பாதை பணிகள் நடைபெற்றது. இதில் மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி வரை ஒரு திட்டமாகவும், மணியாச்சி- திருநெல்வேலி- நாகர்கோவில் வரை மற்றொரு திட்டமாகும் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடந்தது.
மணியாச்சி-திருநெல்வேலி- நாகர்கோவில் இடையேயான பணியில் திருநெல்வேலி- ஆரல்வாய்மொழி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்து அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் ஏற்கனவே நடைபெற்றது. இதனைதொடர்ந்து ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் சந்திப்பு வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடந்த 27-ஆம் தேதியன்று அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
இதையடுத்து கன்னியாகுமரி-நாகர்கோவில் டவுன் வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி, பாலங்கள், மின் இணைப்பு, சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நேற்று முன்தினம் முழுமையாக முடிவந்தது.
இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி இருந்து நாகர்கோவில் சந்திப்பு வழியாக நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வரை புதிய இரட்டைவழி பாதையில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் நேற்று காலை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது சோதனை ஓட்டத்தில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்ட ஒரு அதிவிரைவு ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் கன்னியாகுமரியில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. அந்த ரயில் நாகர்கோவில் டவுன் நிலையத்தை 25 நிமிடங்களில் காலை 9.35 மணிக்கு வந்தடைந்தது.