» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோடை விடுமுறையில் 239 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 20, ஏப்ரல் 2024 8:44:34 AM (IST)
கோடை விடுமுறையை முன்னிட்டு 239 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் நாடு முழுவதும் 9 ஆயிரத்து 111 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில், தெற்கு ரயில்வே 19 வழித்தடங்களில் 239 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வே மூலம் கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், புதுடெல்லி, மேற்கு வங்காளம், குஜராத் முதலிய மாநிலங்களுக்கு இயக்கப்பட உள்ளது. மேலும் சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பயணிகளின் வசதிக்காக தேர்தலையொட்டி சிறப்பு ரயில்களையும் அறிவித்துள்ளது.
மேலும், இதைத்தவிர பல புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 369 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2 ஆயிரத்து 742 ரயில்கள் இயக்கப்பட்ட உள்ளது.அனைத்து பயணிகளும் பாதுகாப்பு மற்றும் வசதியாக பயணம் செய்ய இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.