» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!

சனி 14, ஜூன் 2025 9:26:14 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தளங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்றம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்படுத்தும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (14.06.2025) துவக்கி வைத்து பேசுகையில் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 

குறிப்பாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரியில் ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் கண்ணாடி பாலம் ஆனது உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறந்த திட்டமாகும்.

கன்னியாகுமரியிலிருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாத்தூர் தொட்டிப்பாலம். 1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இப்பாலம் 115 அடி உயரமும் ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீர் எடுத்துச் செல்லும் பகுதியானது 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது. 

தண்ணீர் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. இந்தப் பாலம், மலையின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீரை விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளின் பாசனத் தேவைக்காகக் கொண்டு செல்கிறது. ஆண்டுக்கு சுமார் 1 இலட்சம் உள்நாடு மற்றும் அயல்நாடு மாத்தூர் தொட்டிபாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணங்க சுற்றுலாத் துறையின் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவுக்கூடம், கழிவறை, நுழைவு வாயில், நுழைவுச்சீட்டு வழங்கும் அறை உட்பட பல்வேறு அடிப்படை சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் இன்று துவக்கிவைக்கபட்டுள்ளது. 

இந்த சுற்றுலா மேம்பாடு பணியானது ஒரு கனவு திட்டமாகும். இப்பணிகள் அனைத்தையும் இந்த ஆண்டிற்குள் முடித்து ஜனவரி மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்ய ஆணை வழங்கி உள்ளார்கள். அதற்கான பணியும் சேர்ந்து நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையை கண்டுகளித்த பின்னர் இரண்டாவதாக வரக்கூடிய இடம் மாத்தூர் தொட்டி பாலம் ஆகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு கடந்த நான்காண்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிகவும் பொற்காலமான ஆண்டுகளாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மத மக்களையும் மதித்து போற்றுகின்றவர் என்பதற்கு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆனது 418 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பதே எடுத்துக்காட்டாகும்.

மாத்தூர் தொட்டி பாலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே இருந்து வந்தது. அயக்கோடு - அருவிகரையை இணைக்கின்ற பாலம் ரூ.6 கோடி மதிப்பில் சீரமைத்தல், கல்லடிமாமூடு பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கன்னியாகுமரியில் நெய்தல் இடத்தின் பிரதிபலிப்பாக சன் பார்க் அமையுள்ளது. அதேபோன்று முல்லை நிலத்தின் பகுதியாக வேளிமலை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறிஞ்சி நிலத்தின் பிரதிபலிப்பாக பெருஞ்சாணி பகுதியில் வனத்துறையின் இடத்தில் பார்க் அமைய நிதி பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து உதயகிரி கோட்டையில் பறவைகள் பூங்கா அமைக்க தொழில்நுட்ப அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அனுமதி பெறப்படும். மேலும் மார்த்தாண்டத்தில் ரூ.14.50 கோடி மதிப்பில் தினசரி சந்தை அமைக்கவும், ரூ.9 கோடி மதிப்பில் களிக்காவிளை பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் தீர்வு தளம் எனும் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றி வருவதாலும் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் இரவு பகல் பாராமல் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று ஒவ்வொரு துறையிரையும் ஒருங்கிணைத்து துரிதமாக பணியாற்றி நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். 

எனவே பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. நமது மாவட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்தும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தளங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக திட்டப்பொறியாளர் பொறி.அ.சீனிவாசன், திருவட்டார் வட்டாட்சியர் கந்தசாமி, அருவிக்கரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சலேட் கிறிஸ்டோபர், அரசு வழக்கறிஞர்கள் ஜாண்சன், ஜெகதேவ், கிறிஸ்டோபர், துறை அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory