» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 4:44:30 PM (IST)



விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு திடல் போன்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்காதது ஏன்? என்று கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு சனிக்கிழமை இரவு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்டமாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பொன்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பரத் குமார் அமர்வில் செவ்வாய்க்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், "தவெகவினர் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. தவெக பொதுச் செயலாளர் ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிர்வாகிகளை அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. 

வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தார். அப்போது வேலுச்சாமிபுரத்தை ஏற்பதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்தியதை மீறி, மாற்று வழியில் வந்தனர்.” என்று வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பரத் குமார், "மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி மதிப்பிட்டீர்கள்?, 10,000 பேர் தான் வருவார்கள் என்று எதனை வைத்து கூறினீர்கள்?, திடல் போன்ற இடத்தை கேட்காதது ஏன்?, அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?, கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.

தவெக தரப்பில் அளித்த பதிலில், "காவல்துறையினர் ஒவ்வொரு மனுவாக நிராகரித்தனர். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என நினைத்தோம். இவ்வளவு கூட்டம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவல்துறை தரப்பில், "கூட்டம் அளவுகடந்து சென்ற போது பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் அறிவுறுத்தினோம், ஆனால், ஆதவ் அர்ஜுனா கேட்க மறுத்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory