» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளி 17, அக்டோபர் 2025 5:16:40 PM (IST)

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாதிய ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றியதாவது: அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சமூக சீர்திருத்தச் சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றைத் தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே சீர்திருத்த இயக்கங்கள் போராடியது, வாதாடியது.

சீர்திருத்தச் சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது. இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது; சாதி வேற்றுமையானது. வேற்றுமை விதைக்கப்பட்டதும், ஒற்றுமைக்கான குரல்கள் தமிழ் மண்ணில் உரக்க எழுந்ததை காண்கிறோம். அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கி இருக்கிறோம்; சமநீதி, சமூக நீதி உறுதிமொழி எடுக்கிறோம்.

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம். இருக்கிறோம். சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம்-பொதுவுடைமை - பொது உரிமை கல்வி உரிமை - அதிகாரஉரிமை ஆகிய கொள்கைகள் தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும். அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம். இதன் மூலமாகதான் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

சமூகங்களின் பெயர்களில் ‘ன்’ விகுதியை நீக்கி ‘ர்’ என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவது தடுக்கப்படுகிறது. என்பது தான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுக்க பரவி, நம் அறிவினால் மதிக்கப்பட்டு வரும் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக் கொள்வது என்ன நியாயம்? என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வி ஆகும்.

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்படும்.

எதன் காரணமாகவும் ஒருவரை கொலை செய்வதை நாகரீக சமூகம் ஏற்காது. அவ்வப்போது எங்கேயேனும் நடக்கும் சம்பவம் தலைகுனிய வைக்கிறது. அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. சீர்திருத்தப் பரப்புரையை குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory