» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்றால் என்ன தவறு? - தமிழிசை காட்டம்

வியாழன் 19, மார்ச் 2026 3:59:11 PM (IST)

கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்திப்பதில்லையா? எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்றால் என்ன தவறு? என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார். 

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  டெல்லி சென்றது குறித்த கேள்விக்கு அவர் விளக்கமளித்தார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றாலே ஏதோ குழப்பம் என்று ஏன் கருதுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன், "கூட்டணித் தலைவர்களைச் சந்திப்பதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளார். கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்திப்பதில்லையா? அமித் ஷா தமிழகம் வந்து இங்குள்ள கூட்டணித் தலைவர்களைச் சந்திக்கிறார். பிரதமர் மோடியும் ஒரே மேடையில் கூட்டணித் தலைவர்களுடன் பங்கேற்கிறார். மாநிலக் கட்சித் தலைவர் ஒருவர், தேசியக் கட்சித் தலைவரை நிர்வாக ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசுகையில்: "கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 5 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மதிமுகவிற்கும் 6 இடங்களிலிருந்து 4 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 'அழுத்தம்' கிடையாதா? திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்று அவர்கள் கூறினாலும், பாஜக என்னும் பூச்சாண்டியைக் காட்டி அவர்கள் அடிமைத்தனமாகத் தொகுதிகளைக் குறைத்துப் பெற்றுள்ளனர். 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போலத்தான் திமுக கூட்டணிக் கட்சியினரின் பேச்சு உள்ளது.

திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற அழுத்தத்திற்குத் தள்ளப்படுவதாகத் தமிழிசை சாடினார். கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பாஜகவை ஒரு பகையாகக் காட்டித்தான் தங்கள் தொகுதிப் பகிர்வை உறுதி செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory