» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்: 5 கேள்விகளை எழுப்பி பொன்ராஜ் பதிலடி!

வெள்ளி 27, மார்ச் 2026 12:09:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கிளம்பிய சர்ச்சையில், தான் எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ள பொன்ராஜ், நடிகர் விஜய்யிடம் ஐந்து முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சில கருத்துக்களை விமர்சித்துப் பேசிய பொன்ராஜுக்கு எதிராக அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பொன்ராஜ், தன்னை 'ஆதாய சூதாடி' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய்க்கு மனைவியாகக் கூட இருப்போம்" என்று பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசிய பெண்களைக் கண்டித்துத் திருத்தாமல், அதை ரசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் 'ஆதாய அரசியல் சூதாடியா' அல்லது நானா?

கணவரை விட விஜய்யைத் தான் பிடிக்கும்" என்று கூறும் பெண்மணியைக் கண்டிக்காமல் ரசிப்பது முறையா?

குப்பை கூட்டுபவள் கூட நான்கு கணவர்களை வைத்துள்ளாள்" என்று ஒரு மாணவி பேசியபோது, அதைத் திருத்தாமல் ரசித்தது ஏன்?

எனது அரசியல் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல், எதற்கெடுத்தாலும் 'திமுக பின்னணியில் இருக்கிறது' என்று கூறுவது ஏன்?

இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. எனது குடும்பத்தை இழிவாகப் பேச உங்கள் 'வெர்ச்சுவல் வாரியர்களை' (Virtual Warriors) உருவாக்கி வைத்துள்ளீர்களா?

தன்னைப் பெண்களுக்குப் பாடம் எடுக்கச் சொல்லும் முன்பு, விஜய் சில விவகாரங்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்:

தவெக கட்சி ஆட்களால் பாலியல் பாதிப்புக்குள்ளான பெண்களிடம் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னைச் சந்திக்க வந்தபோது காரால் இடித்துத் தள்ளப்பட்ட பெண் நிர்வாகியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  கட்சிப் பணிகளுக்காக உயிர்நீத்த இளைஞர்களின் குடும்பப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

"இவற்றை விஜய் முதலில் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். பொது வெளியில் கலாச்சார சீர்கேட்டை உருவாக்குபவர்களை நான் எப்போதும் தட்டிக்கேட்பேன்" என்று பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனக்கு அலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டால், அதன் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory