» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்காது - கனிமொழி எம்.பி. பரப்புரை!

சனி 4, ஏப்ரல் 2026 11:32:52 AM (IST)



பாஜகவுடன் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்காது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் ஆத்தூர், ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: "எதிரணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்பவர். பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு, தற்போது தனது சுயலாபத்திற்காக மீண்டும் அக்கூட்டணியில் இணைந்துள்ளார். 

தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் சி.ஏ.ஏ சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசியவர் அவர். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க மத்திய அரசு முயல்கிறது. இதற்கான நிதி குறைக்கப்பட்டதோடு, டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழக கிராமங்களின் வேலைவாய்ப்பைத் தீர்மானிக்க நினைக்கிறார்கள். தமிழகத்திற்கு இழைக்கப்படும் இத்தகைய துரோகங்களைப் பற்றி எடப்பாடி பழனிசாமி வாய் திறக்க மாட்டார்.

தமிழகத்திற்குத் தேர்தல் நேரத்தில் மட்டும் மோடியும், அமித்ஷாவும் சுற்றுலாப் பயணிகளைப் போல வந்து செல்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது. அந்த அக்கறையில்தான் கேட்கிறேன், இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி வரிசையாவது கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமல்ல, தன்னை வளர்த்து பதவியில் அமர வைத்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் துரோகம் செய்தவர். இப்படிப்பட்டவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும்," என்று கனிமொழி பேசினார். இந்தக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory