» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் இன்று வரை மொத்தம் ரூ. 53,57,080 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைச் செயல்படுத்தவும், முறையற்ற பணப்பரிமாற்றத்தைத் தடுக்கவும் மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் (கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்) தலா 18 பறக்கும் படைகள் மற்றும் 18 நிலையான கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட மார்ச் 15-ஆம் தேதி முதல் இன்று (ஏப்ரல் 7, காலை 6:00 மணி) வரை, பறக்கும் படையினரின் சோதனையில் மொத்தம் ரூ. 53,57,080/- உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதற்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இதுவரை ரூ. 16,80,700/- கைப்பற்றப்பட்டுள்ளது; இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூ. 64,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக குளச்சல் தொகுதியில் ரூ. 14,42,050/- மற்றும் கிள்ளியூர் தொகுதியில் ரூ. 7,80,790/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் மற்ற தொகுதிகளான நாகர்கோவிலில் ரூ. 6,53,340/- மதிப்பிலான ரொக்கமும், கன்னியாகுமரி தொகுதியில் ரூ. 4,66,700/- மதிப்பிலான ரொக்கமும் சோதனையில் சிக்கியுள்ளன. பத்மனாபபுரம் தொகுதியில் இதுவரை ரூ. 3,33,500/- கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை விளவங்கோடு தொகுதியைத் தவிர மற்ற ஐந்து தொகுதிகளிலும் புதிய பறிமுதல் ஏதுமில்லை என மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ரூ. 50,000-க்கும் அதிகமான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும் போது உரிய வங்கி ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory