» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை : டியூபர் மாரிதாஸ் கைது: அதிமுக, பாஜக கண்டனம்

திங்கள் 8, ஜூன் 2026 4:38:45 PM (IST)

சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் விஜயின் அராஜகம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தவெகவின் "ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்-அமைச்சர் விஜயின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது.

தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா?

ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட மாரிதாஸ் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் மாரிதாஸ் கைது; அதிமுக கண்டனம்

அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: யூடியூபர் மாரிதாஸ் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின் ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்? பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?

நீங்களும் பிரஸ் மீட் கொடுக்க மாட்டீங்க. செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் பிளாக் அவுட் பண்ணுவீங்க. யூடியூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க. அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்-அமைச்சர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவரால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சூத்திரதாரி என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா அவர்களே ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே?அமலாக்கத்துறை ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் சூத்திரதாரி என அமலாக்கத்துறை கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே? இந்த உண்மைகளை தொடர்புபடுத்தி தானே மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?

மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்? அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா? ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக மாரிதாஸ் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory