» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

த.வெ.க ஆட்சி குறித்து 3 மாதங்களில் வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள்: பாஜக சாடல்!

செவ்வாய் 16, ஜூன் 2026 8:12:44 AM (IST)



தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் த.வெ.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் எனப் பாஜக பிரசாரப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் மற்றும் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் பிரசாரப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியராஜ் கலந்துகொண்டு பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டியராஜ் கூறியதாவது: "தற்போதைய முதலமைச்சர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது. த.வெ.க எம்எல்ஏ மீது கடுமையான குற்றச்சாட்டைத் தெரிவித்துப் பெண் ஒருவர் வீதி வீதியாக அலைந்து வருகிறார். இதுகுறித்து முதலமைச்சர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

முதலமைச்சர் விஜய் திரைப்படங்களில் டப்பிங் பேசி நடித்து வெற்றி பெற்றவர். அவர், தற்போது 'டப்பிங் திமுக'-வின் முதலமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். திமுகவின் இரண்டாவது பாகமாக தான் த.வெ.க உள்ளது. கடந்த ஆட்சியில் திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான், இன்று த.வெ.க ஆட்சியில் அமரக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால், இந்த மோசமான ஆட்சியால் அடுத்த 3 மாதங்களிலேயே த.வெ.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள்" என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் சேதுராஜ், வேல்ராஜா, வீரமணி, நகரத் தலைவர் காளிதாஸ், ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சண்முகராஜ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory