» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அப்பாவை அங்கு தேடாதீர்கள்! - முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதிலடி!

வியாழன் 25, ஜூன் 2026 12:36:37 PM (IST)

திமுகவுக்குக் கூட்டணியே தேவையில்லை என்று மக்கள் கூறுவதைக் கட்சித் தலைமை விரைவில் பரிசீலிக்கும் என்றும், சட்டசபையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தான் என்றும் மக்கள் மனதிலேயே இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி மதிவாணன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், தற்போதைய தவெக ஆட்சியில் மின்வெட்டு மற்றும் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் நாட்டில் நிலவி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சியின் போது மேட்டூர் அணை எப்போதும் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இவைகளைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமாகப் பேசி, அதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று கோரியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், "உங்க அப்பாவை காணோம்" என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய ஸ்டாலின், "உங்க அப்பாவை அங்கு தேடாதீர்கள். இந்த ஸ்டாலின் மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன், மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக நிற்பேன். நான் அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளும் மக்களோடு மக்களாகவே இருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பணியாற்றுபவர்களே திமுகவினர்" என்று கூறினார்.

மேலும், தலைமைச் செயலகக் கோட்டையில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் கோப்புகளில் தனது கையெழுத்து இன்றும் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மகளிர் உரிமைத் தொகை இருக்கும் வரை கோட்டையிலும் மக்கள் மனதிலும் ஸ்டாலின் இருப்பான் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இருந்து தாங்களாக யாரும் யாரையும் வெளியேற்றவில்லை என்றும், அவர்களாகவே வெளியேறுவதற்குத் தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். அதே நேரத்தில், தற்போதைய சூழலில் திமுகவுக்கு இனி எந்தக் கூட்டணியும் தேவையில்லை என்று பொதுமக்கள் கூறி வருவதாகவும், மக்களின் அந்த விருப்பத்தை விரைவில் கட்சித் தரப்பில் நிச்சயம் பரிசீலிப்போம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory