» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!

புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)

Nagarcoilmurder.jpg

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானதைத் தொடர்ந்து, சிறைக் காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். ஜூலை 9-ஆம் தேதி சபரிவர்மன் கடையில் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி போலீசார் அவரைத் தடுத்துக் காவலில் எடுத்து, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் ஜூலை 13-ஆம் தேதி காலை மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, சிறை அலுவலர்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

சபரிவர்மனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் நாகர்கோவில் கிளைச் சிறையில் சிறைக் காவலர்கள் மற்றும் சக கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சபரிவர்மனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன் பிரேத பரிசோதனை அறிக்கையில், சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்தப் பாதிப்புகளே அவரது மரணத்திற்குக் காரணம் என்பதும் உறுதியானது.

இதையடுத்து, இக்கொலை வழக்குத் தொடர்பாக நாகர்கோவில் கிளைச் சிறை தலைமைக் காவலர் ஜெகன், முதன்மை தலைமைக் காவலர் திருமலைநம்பி (திருவிடைநம்பி), சிறைக் காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் ஜெகன், காவலர்கள் சிவக்குமார், திருமலைநம்பி ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory