» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்.டி.ஆர். பாணி அதிசயத்தை நிகழ்த்தியவர் விஜய்: கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் பேச்சு!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:43:51 PM (IST)

Nanjisampathkvp.jpg

தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டிய நிலை இல்லாமல் பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்று  நாஞ்சில் சம்பத் பேசினார்.

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாகத் தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மருத்துவ உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், 1,500 பேருக்கு இலவச அரிசிப் பைகளும் எனச் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்குள்ளாகவே ஆட்சிப் பொறுப்பேற்றுத் தவெக தலைவர் விஜய் வரலாறு படைத்துள்ளார். மக்களையே மூலதனமாகக் கொண்டு சாதி, மதம், பணப் பின்புலமின்றி வெற்றி பெற்று ஆந்திராவில் என்.டி.ஆர். நிகழ்த்திய அரசியல் அதிசயத்தைத் தமிழகத்தில் நிகழ்த்தியுள்ளார்.

2026 தேர்தலில் 15 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினும் தோல்வியடைந்துள்ளார். தவெக ஆட்சியில் பெண்களைப் பாதுகாக்க 'சிங்கப்பெண்' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டிய நிலை இல்லாமல் பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகளில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டிய திருத்தங்களை எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி சேர்த்துக்கொண்ட பெருந்தன்மை கொண்டவர் முதல்வர் விஜய்.

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்துத் தவெக போராடி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் பாஜகவை நாடாளுமன்றத்தில் கண்டிக்க வேண்டாம் எனக் கூறியதாகச் சாடினார்.

தமிழகத்தைக் கருணாநிதி மயமாக்க நினைத்த திமுக போலன்றி, தவெக அரசு காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டித் தலைவர்களைக் கௌரவிக்கிறது. சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத்தை விடத் தமிழகம் முன்னேறி வருகிறது. இறுதியாக, தவெக ஆட்சியின் சாதனைகளை இளைஞர்களும் பொதுமக்களும் கொண்டாடி வருவதாக நாஞ்சில் சம்பத் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory