» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் இறகுப்பந்து போட்டி: அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்
திங்கள் 24, ஜூலை 2023 8:01:43 PM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சின்னமணிநகர் இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இறகு பந்து கழக தலைவரும், கவுன்சிலருமான சந்திரபோஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அவர், இதுபோன்ற விளையாட்டுகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என்று விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார். விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் பொன்னப்பன் மற்றும் பாஸ்கர், செந்தில்குமார், மணி, அல்பட் உள்பட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.