» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெங்கடேஷ் ஐயர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது!

திங்கள் 18, மே 2026 12:29:49 PM (IST)



ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி, நடப்புத் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் உள்ள எழில் கொஞ்சும் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தேல் 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இணைந்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினர். படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அரைசதம் கடந்து விளையாடிய விராட் கோலி 37 பந்துகளில் 58 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்து அதிரடி காட்டினார். கடைசி ஓவரில் டிம் டேவிட் 28 ரன்களுக்கு அவுட்டானார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் தூணாக நின்ற வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து அசத்தினார்.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பிரியன்ஷ் ஆர்யா ரன் ஏதுமின்றியும், 3-ஆவது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தனது 100-ஆவது ஐபிஎல் கேப்டன் போட்டியில் விளையாடிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் பஞ்சாப் அணி 19 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அதன் பின்னர் வந்த கூப்பர் கானொலி (37), ஸ்டாய்னிஸ் (37) ஆகியோர் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்தனர். அதிரடியாக விளையாடிய சஷாங்க் சிங் 56 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அவுட்டானார். அஸ்மத்துல்லா ஓமர்சாய் 14 ரன்கள் எடுத்தார். இறுதியில், பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளிப்பட்டியலும் அடுத்தகட்ட வாய்ப்பும்:

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மறுபுறம், தொடரின் முதல் பாதியில் 8 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றுத் தோல்வியே காணாத அணியாக வலம் வந்த பஞ்சாப் அணிக்கு, இது தொடர்ச்சியான 6-வது தோல்வியாகும். 

தற்போது 13 புள்ளிகளுடன் தவிக்கும் பஞ்சாப் அணி, வரும் மே 23-ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி கணக்குகளைப் பொறுத்தே பிளே ஆஃப் செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரேயஸ் ஐயரின் வரலாற்று மைல்கல்:

இப்போட்டியின் மூலம் பஞ்சாப் அணியின் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாகத் தனது 100-ஆவது போட்டியை நிறைவு செய்துள்ளார். இவர் இதுவரை டெல்லி அணிக்கு 41 போட்டிகளுக்கும், கொல்கத்தா அணிக்கு 29 போட்டிகளுக்கும், பஞ்சாப் அணிக்கு 30 போட்டிகளுக்கும் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory