» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: சார் ஆட்சியர் சுழற்கோப்பையை வழங்கினார்!

வெள்ளி 29, மே 2026 8:40:23 AM (IST)

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மவுலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில், தூத்துக்குடி மாவட்ட அணியை வீழ்த்தி காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி முதலிடம் பிடித்து கோப்படையை வென்றது. 

கடந்த மே 13-ஆம் தேதி தொடங்கிய இம்மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் சென்னை நகர காவல்துறை, சென்னை சுங்கவரி கலால் துறை, சென்னை தாவுது மெமோரியல் கிளப், சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்ரேஷன் கிளப், ஊட்டி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, நீலகிரி, சிவகங்கை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், மதுரை சேது கிளப் மற்றும் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி கால்பந்து அணிகள் பல கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தின.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், தூத்துக்குடி மாவட்ட அணியும் நேருக்கு நேர் மோதின. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் தூத்துக்குடி மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வலுவாக இருந்தது.

இருப்பினும், ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதில் இருந்து காயல்பட்டினம் அணி வீரர்கள் மிக ஆக்ரோஷமாகவும், உத்திகளை மாற்றியும் விளையாடினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய காயல்பட்டினம் வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்து, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர்.

போட்டியின் நிறைவாக நடைபெற்ற பிரம்மாண்ட பரிசளிப்பு விழாவில், திருச்செந்தூர் சார்-ஆட்சியர் கௌதம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முதலிடம் பிடித்துச் சாம்பியன் பட்டம் வென்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு மதிப்புமிக்க சுழற்கோப்பையை வழங்கிப் பாராட்டினார்.

முன்னதாக, சங்க நிர்வாகி எஸ்.ஐ. புகாரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிறைவாகச் சங்க நிர்வாகி யாசர் நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட கால்பந்தாட்டக் கழகச் செயலாளர் லூர்து சேவியர், மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த் ரொட்ரிகோ, செயலாளர் பி.எம். இலியாஸ், துணைச் செயலாளர் ரபீக் அஹ்மத், பொருளாளர்கள் ஹாரூன், செய்யது உமர், எஸ்.ஏ. புஹாரி, சதக், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அருளான்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory