» சினிமா » செய்திகள்

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்: இளையராஜாவுக்கு நீதிமன்றம் கேள்வி!

புதன் 24, ஏப்ரல் 2024 4:31:24 PM (IST)

பாடல்கள் உரிமம் தொடர்பாக பாடலாசிரியர்களும் உரிமம் கோரினால் என்னவாகும் என இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை விதித்தனர். படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதால் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், ‛இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் சம்பளம் வழங்கிவிட்டார். அதன்படி அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்றுவிடும் அதன் அடிப்படையில் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டது' என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், ‛இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் சம்பந்தப்பட்டது. இதற்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‛அப்படி என்றால் ஒரு பாடல் என்பது பாடலாசிரியரின் பாடல் வரிகள் மற்றும் பாடகர்கள் சேர்ந்து தான் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல்கள் இல்லை. பாடலாசிரியர்களும் உரிமை கோரினால் என்னவாகும்' என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory