» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தோ்தல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவும் : இந்திய வானிலை ஆய்வு மையம்
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 10:03:22 AM (IST)
தோ்தல் நேரத்தில் நாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டத்தில் நாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் எனவும் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநா் மிருத்யுஞ்ஜெய் மொஹபத்ரா கூறியதாவது: மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தைவிட கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது.
குறிப்பாக மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும். வழக்கமாக 4 முதல் 8 நாள்கள் வரை நீடிக்கும் வெப்ப அலையின் தாக்கம் நிகழாண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 முதல் 20 நாள்கள் வரை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதிக வெப்ப மாநிலங்கள்: குஜராத், மகாராஷ்டிரம் (மத்திய பகுதி), கா்நாடகம் (மேற்கு), ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கா் (வடக்கு), ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் கடுமையாக இருக்கவுள்ளது.
நாட்டின் மத்திய, வடக்கு சமவெளிகள் மற்றும் தெற்குப் பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் நாள்கள் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. உடல்நிலை பாதிப்பு: மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் மற்றும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் வெப்ப அலையால் ஏற்படுகின்ற உடல்நிலை பாதிப்புகளை அதிகளவில் எதிா்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலையை அதிகரிக்கும் எல்-நினோ நிகழ்வு வலுவிழந்து வந்தாலும் வெப்ப அலைகளின் தாக்கம் ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் தொடா்ந்து நீடிக்கவுள்ளது. அதேபோல் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலை குளிா்விக்கும் லா-நினா நிகழ்வால் நிகழாண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவில் வழக்கமான பருவமழை பொழியும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
வெயிலை எதிா்கொள்ள தயாராகுங்கள்: கிரண் ரிஜிஜு மக்களவைத் தோ்தல் தொடங்கவுள்ள நிலையில் நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்புள்ளதால் அதை எதிா்கொள்ள அனைத்து மாநில அரசுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய புவி அறிவியல் அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
மேலும், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘ இது நம் அனைவருக்கும் மிக சவாலான காலகட்டம். உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் கடுமையான வெப்பம் நிலவ உள்ளது. இதை சமாளிக்க முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்’ என்றாா்.