» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வியாழன் 25, ஏப்ரல் 2024 5:19:27 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன. இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார நடத்தைக்கு அரசியல் கட்சிகள்தான் முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரசார உரைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜஸ்தானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பொதுமக்களின் சொத்துக்களையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது" என்று பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தேர்தல் ஆணையத்திலும் மோடியின் பேச்சுக்கு எதிராக புகாரளிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் ராகுல் மீது புகாரளித்தது. அந்த புகாரில்,தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் நாட்டில் வடக்கு-தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார்" என்று கூறியிருந்தது. இந்த புகார்கள் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory