» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: ராகுல் காந்திக்கு எதிராகப் பரபரப்பு பேனர்கள்!
திங்கள் 8, ஜூன் 2026 11:36:10 AM (IST)

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் கூடுகிறது. இக்கூட்டத்தில் மொத்தம் 23 கட்சிகள் பங்கேற்க உள்ள சூழலில், திமுக இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அடுத்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட வேண்டிய பல்வேறு மக்கள் பிரச்சினைகள் மற்றும் விவாதங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தொகுதி மறுவரையறைக்கான பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா கடந்த கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான கூட்டு முயற்சியால் தோற்கடிக்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய பாஜக அரசு தீவிரமாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்தும், அதை எதிர்கொள்வதற்கான கூட்டு வியூகங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கிய விவாதம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறித் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சிக்கு ஆதரவளித்ததுடன், அமைச்சரவையிலும் பங்கேற்றன. விசிகவின் இந்த அரசியல் மாற்றத்தைத் துரோகம் என்று திமுக தலைவர்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், கடந்த காலங்களில் 'இந்தியா' கூட்டணியில் மிக முக்கியப் பங்கு வகித்து வந்த திமுக, தற்போது அக்கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகும் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, காங்கிரஸ் தலைமையிலான இன்றைய 'இந்தியா' கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிராகப் பேனர்கள்:
இன்று டெல்லியில் 'இந்தியா' கூட்டணிக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை நேரடியாகக் கடுமையாக விமர்சித்து டெல்லியின் முக்கியப் பகுதிகளில் ஆங்காங்கே பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள அந்தப் பேனர்களில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பேனர்களில், "20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி எங்கள் முதுகில் அமர்ந்து கொண்டுதான் அரசியல் ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தது; ஆனால், அதன் பிறகு அது எங்கள் முதுகிலேயே குத்திவிட்டது" என்ற கடுமையான விமர்சன வாசகங்கள் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளன.
'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அதே நாளில், கூட்டணியின் முக்கியத் தலைவர்களின் படங்களுடன் காங்கிரஸுக்கு எதிராக டெல்லியில் பேனர்கள் முளைத்திருப்பது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாபெரும் விரிசலை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரூ.6,000 சம்பளத்திலிருந்து கோடிக் கணக்கில் சொத்து குவிப்பு: விசாரணையில் சிக்கிய அரசுப் பொறியாளர்!
திங்கள் 8, ஜூன் 2026 10:46:58 AM (IST)

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு : 3 மாதங்களில் 2-வது முறையாக அதிரடி மாற்றம்!
திங்கள் 8, ஜூன் 2026 10:19:10 AM (IST)

பஞ்சாப்பில் அஸ்தியை கரைக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: லாரி மீது வேன் மோதி 9 பேர் சாவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:38:37 AM (IST)

சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:20:58 AM (IST)

நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்: மகன் கெஞ்சியும் கேட்காமல் கொடூரம்!
சனி 6, ஜூன் 2026 12:07:22 PM (IST)

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்: 7 பேர் பலி; 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!
சனி 6, ஜூன் 2026 11:54:23 AM (IST)


