» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)

மக்களின் உடல் நலனுக்குப் பெரும் தீங்கை ஏற்படுத்தும் 16 வகையான நிலையான அளவு கூட்டு மருந்து கலவைகளைத் தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நாடு தழுவிய அளவில் உடனடித் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது!

மருத்துவத் துறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாகச் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்துகள் 'நிலையான அளவு கூட்டு மருந்துகள்' (மருந்து கலவைகள்) என அழைக்கப்படுகின்றன. இத்தகைய கூட்டு மருந்துகளின் தற்போதைய பயன்பாடு, அவற்றின் திறன் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து விரிவான ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, மத்திய மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இதற்காக ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் சந்தையில் உள்ள பல்வேறு மருந்து கலவைகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், சில குறிப்பிட்ட கூட்டு மருந்துகள் மருத்துவப் பயன்பாட்டிற்கு முற்றிலும் முரணானவையாகவும், பொதுமக்களின் உடல் நலனுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இந்த மருந்து கலவைகள் நோய்க்கான சிகிச்சைக்கான எந்தவித அறிவியல் பூர்வமான நியாயப்படுத்தலையும் கொண்டிருக்கவில்லை என்றும், இவற்றில் நன்மைகளை விட அபாயங்களே அதிகம் என்பதால் இவை பயனுள்ளதாகக் கருதப்படவில்லை என்றும் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 16 வகையான கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு முழுமையாகத் தடை விதித்துள்ளது. இந்த மருந்துகளைத் தயாரித்தல், விற்பனை செய்தல், இருப்பு வைத்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகத் தடை செய்யப்படுகின்றன. பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட பாதுகாப்பான மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட முக்கிய மருந்துகள்:

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள இந்த மருந்து கலவைகளில் தோல் மருத்துவத் தயாரிப்புகள், வலி நிவாரணிகள், தசைத் தளர்வு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி (ஆன்டிபயாடிக்) அடிப்படையிலான கலவைகள் அடங்கியுள்ளன.

வலி நிவாரணிகள் மற்றும் இதர கலவைகள்: அசிட்டைல் சாலிசிலிக் அமிலத்துடன் கூடிய எத்தோஹெப்டசைன் கலவை, டைசைக்ளோமைன்-பாராசிட்டமால்-சிலிடினியம் புரோமைடு கலவை, டைசைக்ளோமைன்-பாராசிட்டமால்-சிலிடினியம் புரோமைடு-குளோர்டியாசெபாக்சைடு கலவை, குரோமியம் பிக்கோலினேட்-கிளைக்லாசைடு கலவை மற்றும் பாராசிட்டமால்-லிக்னோகைன்.

ஆன்டிபயாடிக் கலவைகள்: அமாக்சிலின்-செராட்டியோபெப்டிடேஸ், அமாக்சிலின்-செராட்டியோபெப்டிடேஸ்-லாக்டோபேசிலஸ் ஸ்போரோஜென்ஸ், அமாக்சிலின்-குளோக்சாசிலின், லாக்டிக் அமிலம் பேசில்லஸ்-செராட்டியோபெப்டிடேஸ்.

தோல் மருத்துவ மற்றும் சரும பராமரிப்பு தயாரிப்புகள்: வைட்டமின் இ, ஜோஜோபா எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய், கோதுமை முளை எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், அலன்டோயின் மற்றும் டி-பாந்தெனால் போன்ற மூலப்பொருட்களுடன் கூடிய கற்றாழை அல்லது கற்றாழைச் சாறு கலவைகள்.

மத்திய அரசின் இந்தத் தடை உத்தரவை அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகள் நாடு முழுவதும் மிகக் கடுமையான முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory