» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை: வன்முறையில் 25 வீரர்கள் பலி

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:04:21 PM (IST)



மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்துள்ளது.

மெக்சிகோவில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பல்களை ஒடுக்க முடியாமல் அரசு நீண்டகாலமாகத் திணறி வருகிறது. தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசியல் தலைவர்களை இந்தக் கும்பல்கள் படுகொலை செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' (Jalisco New Generation) என்ற கடத்தல் கும்பலின் தலைவன் நெமசியோ ஓஸ்குவெரா (மென்சோ என அறியப்படுபவர்), ராணுவத்தினர் நடத்திய சிறப்புத் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வெடித்த வன்முறை: ஜாலிஸ்கோ மாகாணத்தின் போர்ட்டோ வல்லார்தா பகுதியில் மென்சோ கொல்லப்பட்ட தகவல் பரவியதும், அந்தப் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடும் வன்முறையில் இறங்கினர். போர்ட்டோ வல்லார்தா, குவாதலஜாரா மற்றும் தபல்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசுப் பேருந்துகள், மகிழுந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

போக்குவரத்து முடக்கம்: 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் சுமார் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. முக்கிய நகரங்களில் விமானச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்புகள்: இந்த வன்முறையை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இது குறித்து அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உமர் கார்சியா ஹர்புக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"ஜாலிஸ்கோ மாகாணத்தில் நடந்த மோதல்களில் தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் 30 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அண்டை மாகாணமான மிச்சோவாகனில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்."

கூடுதல் படைகள் குவிப்பு: நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, வன்முறை பாதித்த பகுதிகளில் கூடுதலாக 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்படுவார்கள் எனப் பாதுகாப்புச் செயலாளர் ரிகார்டோ டிரெவில்லா தெரிவித்துள்ளார். மெக்சிகோ முழுவதும் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory