» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை: வன்முறையில் 25 வீரர்கள் பலி
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:04:21 PM (IST)

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்துள்ளது.
மெக்சிகோவில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பல்களை ஒடுக்க முடியாமல் அரசு நீண்டகாலமாகத் திணறி வருகிறது. தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசியல் தலைவர்களை இந்தக் கும்பல்கள் படுகொலை செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' (Jalisco New Generation) என்ற கடத்தல் கும்பலின் தலைவன் நெமசியோ ஓஸ்குவெரா (மென்சோ என அறியப்படுபவர்), ராணுவத்தினர் நடத்திய சிறப்புத் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வெடித்த வன்முறை: ஜாலிஸ்கோ மாகாணத்தின் போர்ட்டோ வல்லார்தா பகுதியில் மென்சோ கொல்லப்பட்ட தகவல் பரவியதும், அந்தப் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடும் வன்முறையில் இறங்கினர். போர்ட்டோ வல்லார்தா, குவாதலஜாரா மற்றும் தபல்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசுப் பேருந்துகள், மகிழுந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
போக்குவரத்து முடக்கம்: 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் சுமார் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. முக்கிய நகரங்களில் விமானச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்புகள்: இந்த வன்முறையை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இது குறித்து அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உமர் கார்சியா ஹர்புக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஜாலிஸ்கோ மாகாணத்தில் நடந்த மோதல்களில் தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் 30 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அண்டை மாகாணமான மிச்சோவாகனில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்."
கூடுதல் படைகள் குவிப்பு: நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, வன்முறை பாதித்த பகுதிகளில் கூடுதலாக 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்படுவார்கள் எனப் பாதுகாப்புச் செயலாளர் ரிகார்டோ டிரெவில்லா தெரிவித்துள்ளார். மெக்சிகோ முழுவதும் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 11, ஜூலை 2026 12:21:14 PM (IST)



உண்மFeb 24, 2026 - 06:14:50 PM | Posted IP 172.7*****