» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 87 பவுன் நகை கொள்ளை: மர்மஆசாமிகள் கைவரிசை!

திங்கள் 8, ஜனவரி 2024 8:28:23 AM (IST)

நெல்லை டாக்டர் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 87 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் நேசமணிநகர் பிளசண்ட் நகரை சேர்ந்தவர் கலைக்குமார் (52). இவர் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புனிதவதி. இவரும் டாக்டர் ஆவார். சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. அவர் கோவையில் மருத்துவம் படித்து வருகிறார்.

இங்குள்ள வீட்டில் கலைக்குமார் மட்டும் வசித்து வந்தார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர் மாலை அல்லது இரவில் தான் வீடு திரும்புவது வழக்கம். இதனால் பகல் நேரத்தில் வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும்.

நேற்று முன்தினம் வேலை முடிந்து கலைக்குமார் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள், பணம், துணிகள் காணாததை கண்டு திடுக்கிட்டார்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு பட்டப்பகலில் மர்மஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீசுக்கு கலைக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த சமயத்தில் வீட்டு பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை மர்மஆசாமிகள் திருடி சென்று விட்டதாக கலைக்குமார் போலீசிடம் கூறினார். பின்னர் வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள் ஏதேனும் தடயங்களை விட்டு சென்றார்களா? என வீடு முழுவதும் சோதனை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

கொள்ளையர்கள் நடமாட்டம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என கொள்ளை நடந்த வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory