» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்: இளைஞர் காங். தீர்மானம்
சனி 27, ஜனவரி 2024 10:51:49 AM (IST)
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள செல்லப்பாண்டியன் பவனத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் கர்நிகா ஜெகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதற்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணி ஆற்றுவதெனவும், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும், இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட மேலிடம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாணவர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தேவ விஜய், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் கிங்க்ஸ்டன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் சுடலைக்குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் அம்பாசமுத்திரம் வட்டார தலைவர் வழக்கறிஞர் நாராயணன், வள்ளியூர் வட்டார தலைவர் ஸ்டெயின்ஸ், பாளை வடக்கு வட்டார தலைவர் கள்ளத்தியான், மாணவர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் செய்யது முனைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரெட்டியார்பட்டி ராஜ்குமார் நன்றியுரை வழங்கினார்.