» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொருநை நெல்லை திருவிழா விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 29, ஜனவரி 2024 5:38:40 PM (IST)
திருநெல்வேலியில் பொருநை நெல்லை திருவிழா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், கெடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லையில் 2-வது பொருநை நெல்லை இலக்கியத் திருவிழா மற்றும் 7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெறுவது தொடர்பான திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், தெரிவித்ததாவது
தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பை பன்நெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது நெல்லைச் சீமை. இதனைக் கொண்டாடும் வகையிலும், இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்புச் செய்து, மக்களிடையே, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இலக்கியம், புத்தகங்கள், கலைகள் குறித்த ஆர்வத்தை மேம்படுத்தும் வகையிலும் இலக்கியத் திருவிழா மற்றும் ஆறு புத்தக கண்காட்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் "பொருநை நெல்லை திருவிழா 2024” சிறப்பாக நடைபெறவுள்ளது.
"பொருநை நெல்லை திருவிழா 2024”- ல், 2-வது பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கியத் திருவிழாவானது 30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்களில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் மற்றும் பி.பி.எல் மண்டபம் ஆகிய இடங்களிலும், 7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 03.02.2024 முதல் 13.02.2024 வரை டவுண் பொருட்காட்சித் திடலில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்திலும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளன.
இலக்கியத் திருவிழாவில் தென்மாவட்டங்களின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள். மாணவர்கள் பங்கேற்கும் விவாத மேடை மற்றும் இலக்கிய வினாடி வினா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு நிகழ்வில், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் உரைகள் இடம் பெறுகின்றன.
7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. தினமும் சிறந்த ஆளுமைகள் பங்கு பெறும் கருத்தரங்குகள், கவியரங்குகள், பட்டிமன்றங்கள், பல்வேறு அரசுத் துறைகளின் சிறப்பு நிகழ்வுகள் போன்றவை நடைபெற உள்ளன. மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில், பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படவுள்ளன.
இப்பயிற்சிப் பட்டறைகளில் மாவட்டத்தின் தொன்மையான கைத்தொழில்கள் மற்றும் கலைகள் குறித்து அத்துறை சார்ந்த வல்லுநர்களால் வகுப்புகள் நடத்தப் படவுள்ளன. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் "நெகிழி இல்லா” (Plastic Free) புத்தக திருவிழாவாக நடத்தப்படவுள்ளது. புத்தகத் திருவிழாவின்போது மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கலை இலக்கியப் போட்டிகள் மற்றும் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பாரம்பரிய உணவு அங்காடிகள் இ டம் பெற உள்ளன.
30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய தேதிகளில் நடைபெறும் 2-வது பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள 7-வது பொருநை புத்தகத் திருவிழாவிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய மன்றங்களின் சார்பில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பொருநை புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. புத்தகத் திருவிழாவில் புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி, பயிலரங்குகள், அமைக்கப்படவுள்ளது. எழுத்தாளார்கள், படைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள், இலக்கியவாதிகளின் வெளியீடுகள் வெளியிடப்படவுள்ளது. மேலும் மாணவ, மாணவியர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தருவதற்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொருநை நெல்லை திருவிழா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், கெடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , எழுத்தாளர்கள் திரு,நாறும்பூநாதன், பேரா..சவுந்தர மகாதேவன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.