» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து மாணவன் பலி; 10 பேர் காயம்!
வியாழன் 15, பிப்ரவரி 2024 8:32:33 AM (IST)
விக்கிரமசிங்கபுரம் அருகே நாய் குறுக்கே வந்ததால் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 10 பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பையில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று காலை விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஆதித்யா, சூர்யா, மாரி மிர்திக், கிருபா ஸ்ரீ, கார்த்திகேயன், மாலினி, விக்னேஷ், இசக்கியம்மாள், சுப கார்த்திகா, சிவ தர்ஷினி, பிரதீஷ் என சுமார் 11 மாணவ-மாணவிகள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
அடையகருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 54) என்பவர் ஆட்டோவை ஓட்டினார். விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டி அருகே உள்ள கல்சுண்டு காலனி மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.மேலும் சாலையின் குறுக்கே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரின் இருக்கை அருகே அமர்ந்திருந்த விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சித்திரைநாதன் மகன் பிரதீஷ் (10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேேய பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 10 பள்ளி குழந்தைகளும் காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காயம் அடைந்த பள்ளி குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3-ம் வகுப்பு படிக்கும் சூர்யா, சிவதர்ஷினி, 7-ம் வகுப்பு படிக்கும் மாலினி ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பிரதீஷ் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார், ஓட்டுனர் இருக்கை அருகே மற்றொருவரை அமர வைத்தல், அதிக நபர்களை ஏற்றுதல், கவனக்குறைவாக செல்லுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சுந்தரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.