» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விஷம் குடித்த பெண் போலீசின் கணவர் சாவு
வியாழன் 7, மார்ச் 2024 8:32:49 AM (IST)
செங்கோட்டையில் விஷம் குடித்த பெண் போலீசின் கணவர் பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை கே.சி. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கருத்தபாண்டி மகன் சுடர் ராஜா (38). இவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருள் செல்வி (33), நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அருள் செல்வி தன்னுடைய குழந்தைகளுடன் அம்பை கோவில்குளம் பகுதியில் வசித்து வருகிறார்.
சுடர் ராஜா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த 4-ந்தேதி சொந்த ஊரான செங்கோட்டைக்கு வந்தார். பின்னர் அவர், மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக அம்பை கோவில்குளத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்ேபாது சுடர் ராஜா பேன் மருந்தை (விஷம்) குடித்து விட்டு சென்றுள்ளார். அம்பை கோவில்குளத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்றதும் சுடர் ராஜா மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருள்செல்வி உடனே கணவரை அம்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சுடர் ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சுடர் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.