» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடையத்தில் முதுமக்கள் தாழிககள் கண்டுபிடிப்பு : தொல்லியல்துறை மாணவர்கள் ஆய்வு
வெள்ளி 8, மார்ச் 2024 5:11:39 PM (IST)
கடையத்தில் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளை தொல்லியல் துறை மாணவ, மாணவிகள் கண்டறிந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையத்திற்கு அருகே முதுமக்கள் தாழிகள் உள்ளதை ஊர் மக்கள் பார்த்துள்ளார். இந்த இடத்தில் இதுவரை முதுமக்கள் தாழிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என இந்த பகுதிக்கு சென்ற மாணவி மனோ பிருந்தா தெரிந்து கொண்டார். இந்த மாணவி தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பாவூரைச் சார்ந்தவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டம் படித்து வருகிறார்.
கடையத்தில் உள்ள முதுமக்கள் தாழிகள் பற்றிய தகவல்களை மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் துறைக்கு தெரிவித்தார். நேற்று பல்கலைக் கழக தொல்லியல் துறையைச் சார்ந்த 24 மாணவ மாணவிகள் இந்த பகுதியை கள ஆய்வுக்காக பேராசிரியர்களான மதிவாணன் மற்றும் முருகன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். இவர்களுடன் தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சி. சுதாகர் மற்றும் எழுத்தாளர் முத்தலாங்குறிச்சி காமராசும் சென்றிருந்தனர்.
இங்கு கருப்பு ஓடுகள், சிவப்பு ஓடுகள் மற்றும் கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளையும் கண்டறிந்தனர். ஒரு தாழியின் அருகே பழமையான ஒரு இரும்பு வாள் ஒன்றின் உடைந்த பகுதியும் கண்டுபிடித்தனர். மேலும் இங்குள்ள தாழிகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டறிந்தனர். இதன் மூலம் இந்த பகுதி 2000 ஆண்டுகளுக்கு முன்பு இடுகாடாக இருந்தது என விளக்குகிறது. இந்த ஊர் மக்கள் இந்த பகுதியை இப்போதும் சுடுகாடாகவே பயன்படுத்திவருவது ஆச்சரியமான உள்ளது. இந்தப் பகுதி தட்டப்பாறை சுடுகாடு என அழைக்கப்படுகிறது என தோல்லியல் ஆர்வலர் கடையம் பாரதி தெரிவித்தார் .