» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
திங்கள் 18, மார்ச் 2024 10:04:40 AM (IST)
சங்கரன்கோவில் அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. எனவே பொதுமக்களுக்கு ஓட்டுப்போட பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் வாகனங்களில் பணம் எடுத்துச்செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு அவர்களும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளம் பகுதியில் தேர்தல் பிரிவு தாசில்தார் பாபு தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி (வயது 50) என்பதும், பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.